பிரதமர் மோடியின் நிர்வாகத்தால் பொருளாதார ரீதியாக இந்தியா சிறப்பாக உள்ளது - உலக பொருளாதார மன்றம்

உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா பிரகாசமாக உள்ளது. உலகில் பிரதமர் மோடியின் தலைமை முக்கியமானது என உலக பொருளாதார மன்றம் கூறியது.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

டாவோஸ்:

உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்று வருகிறது இந்த மாநாட்டில் 130 நாடுகளைச் சேர்ந்த 2,700 தலைவர்களும், இந்தியாவில் இருந்து 100 உயரதிகாரிகள் உள்பட தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

புவிசார் அரசியல் மோதல்கள், உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகள் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய அக்கறையுள்ள விஷயங்களைப் பற்றி விவாதிக்க தலைவர்கள் கூடி உள்ளனர்.

இதைத்தொடர்ந்து உலக பொருளாதார மன்றத்தின் நிறுவனரும் செயல் தலைவருமான கிலாஸ் ஸ்வாப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

இந்திய மந்திரிகள் குழுவையும், மிக முக்கிய இந்திய தொழிலதிபர்கள் குழுவையும் சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

பருவநிலை மாற்றம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உலக சுகாதாரம், பெண்கள் தலைமையிலான பொருளாதார முன்னேற்றம், டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கான பொது கட்டமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் பங்களிப்பு பாராட்டுக்குரியது.

புவிசார் பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் ஆகியவற்றில் இந்தியா ஒளிபொருந்திய நாடாக திகழ்கிறது. உலக பொருளாதார மன்றம் இந்தியாவுடன் 38 ஆண்டுகாலமாக நல்லுறவைக் கொண்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கும் இந்த தருணத்தில் அதனுடனான உலக பொருளாதார மன்றத்தின் நல்லுறவு தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஜி20-யின் இந்திய தலைமையின் கீழ் உலகம் வளர்ச்சி காணும். பலவாறாக பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில் ஜி20 கூட்டமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை ஏற்றிருப்பது மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com