அமைதியான முறையிலே அதிகார மாற்றம் நடைபெறும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகள். மக்கள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார் அதிபர் பைடன்.
அமைதியான முறையிலே அதிகார மாற்றம் நடைபெறும்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு வாழ்த்து குவிந்து வருகிறது. ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.

இந்நிலையில், தேர்தலுக்கு பிறகு அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

உலக வரலாற்றில் சுயாட்சியில் அமெரிக்கா மிகப்பெரிய சோதனையை எதிர்கொண்டு உள்ளது.

மக்கள் அமைதியாக வாக்களித்து தங்கள் தலைவரை தேர்வு செய்கின்றனர். ஜனநாயகத்தில் மக்களின் விருப்பமே எப்போதும் மேலோங்கும்.

அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப்பை அழைத்து பாராட்டு தெரிவித்தேன். அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடப்பதை, அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்ற எனது நிர்வாகத்திற்கு உத்தரவிடுவேன் என அவரிடம் தெரிவித்துள்ளேன். மக்களும் அதனை விரும்புகின்றனர்.

கமலா ஹாரிஸ் எனது கூட்டாளி. பொது சேவகர். அவர் தனது முழுமனதுடன் கடுமையான முயற்சியில் ஈடுபட்டார்.

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக அவருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள். மக்கள் முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அமெரிக்க தேர்தல் முறையின் ஒருமைப்பாடு பற்றிய கேள்விகள் இனி வராது என நம்புகிறேன். அந்த முறை நேர்மையானது. நியாயமானது. வெளிப்படையானது என்பதை நம்பலாம்.

ஜனவரி 20-ம் தேதி அமெரிக்காவில் அமைதியான முறையில் அதிகார மாற்றம் நடைபெறும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com