search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடித்தது- கண்ணீர் புகை குண்டு வீச்சு
    X

    இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடித்தது- கண்ணீர் புகை குண்டு வீச்சு

    • இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.
    • கொழும்பு, மருதானை, பீம்ஸ் ஆகிய இடங்களிலிம் இளைஞர்கள் பேரணி நடத்த முயன்றனர்.

    கொழும்பு:

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. பொருளாதார நெருக்கடியால் பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தது. இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள்.

    இதையடுத்து அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக இலங்கையில் போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டங்களை தீவிரப்படுத்தினார்கள்.

    இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பிறகு இலங்கையில் போராட்டங்கள் ஓய்ந்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

    ஆனாலும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்று மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இலங்கையில் தற்போது மீண்டும் போராட்டங்கள் தலைதூக்கி உள்ளன. கொழும்பு நகரின் பல பகுதிகளை உயர் பாதுகாப்பு வளையமாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

    இதையடுத்து இலங்கையில் மீண்டும் போராட்டங்கள் தொடங்கி உள்ளன. சோசியலிச இளைஞர் சங்கத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் கொழும்பு சுகாதார அமைச்சக கட்டிடத்தின் அருகே பேரணியாக செல்ல முயன்றனர்.

    அப்போது அவர்களை தடுக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. மேலும் தண்ணீரும் பீய்ச்சி அடிக்கப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து சிதறி ஓடினார்கள்.

    இதேபோல் கொழும்பு, மருதானை, பீம்ஸ் ஆகிய இடங்களிலிம் இளைஞர்கள் பேரணி நடத்த முயன்றனர். இதுதொடர்பாக 4 பெண்கள் உள்பட 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×