search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரம்- டிரம்ப் இன்று கோர்ட்டில் ஆஜராகிறார்
    X

    ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரம்- டிரம்ப் இன்று கோர்ட்டில் ஆஜராகிறார்

    • கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
    • டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    புளோரிடா:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அரசின் ரகசிய ஆவணங்களை தன்னுடன் எடுத்து சென்றதாக புகார் எழுந்தது.

    2016-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை பதவியில் இருந்த கால கட்டத்திலான ஆவணங்களை டிரம்ப் அரசிடம் ஒப்படைக்காமல் எடுத்து சென்றதாக தெரிவிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் உள்ள டிரம்ப் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பாக டிரம்ப் மீது மியாமி கோர்ட்டில் கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

    கோர்ட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், "அரசின் அணு ஆயுத திட்டங்கள், ராணுவம் உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் டிரம்ப் வீட்டின் குளியலறை மற்றும் ஹாலில் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணைக்காக இன்று மியாமி கோர்ட்டில் அஜராகும்படி டிரம்புக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் டிரம்ப் ஆஜராவார் என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் ரகசிய ஆவணங்களை எடுத்து சென்ற விவகாரத்தில் கோர்ட்டில் ஆஜராவதற்கு நேற்று இரவு புளோரிடாவுக்கு டிரம்ப் வந்தார். தனி விமானத்தில் அங்கு வந்த அவர் இன்று மியாமி கோர்ட்டில் ஆஜராக உள்ளார்.

    அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வாக்குமூலம் கொடுக்க உள்ளார். வழக்கு விசாரணையின் போது டிரம்ப் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

    ஏற்கனவே ஆபாச நடிகைக்கு தேர்தல் பிரசார நிதியில் இருந்து பணம் கொடுத்த விவகாரத்தில் டிரம்ப் கடந்த ஏப்ரல் மாதம் நியூயார்க் கோர்ட்டில் ஆஜராகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    டிரம்ப், கோர்ட்டில் ஆஜராவதால் அவரது ஆதரவாளர்கள் மியாமியில் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் டிரம்ப் கூறும்போது, "என் மீதான குற்றப்பத்திரிகை, அடுத்த ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் இருந்து விலக என்னை கட்டாயப்படுத்தாது" என்றார்.

    Next Story
    ×