

வால்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே திடீரென தீப்பிடித்தது.
தீ விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போர்ச்சுகல் கடற்படை மற்றும் விமானப்படையினர் விரைந்து கப்பலில் இருந்த 22 பணியாளர்களை பத்திரமாக மீட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்தும், தீயில் சிக்கிய கார்களின் எண்ணிக்கை குறித்தும் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கப்பலில் இருந்த சொகுசு கார்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதேபோல், 2019ம் ஆண்டில் கிராண்டே அமெரிக்கா கப்பல் தீப்பிடித்தபோது சுமார் 2000க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் தீயில் எரிந்து மூழ்கின.
நேற்று இரவு நிலவரப்படி கப்பலின் தீயை முழுமையாக அணைத்துவிட்டு கப்பலை இழுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.