கூட்டாட்சியை வலியுறுத்தி இலங்கையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா

மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக இலங்கை பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளனர்.இதையடுத்து, முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.
அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்
அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்
Published on

கொழும்பு:

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல மாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, தலைநகர் கொழும்புவில் நேற்று போராட்டக்காரர்கள் பேரணி சென்றனர். அதிபர் கோத்தபயா வீட்டில் நுழைந்த அவர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். போராட்டம் தீவிரமடைந்ததை தொடர்ந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

போராட்டத்தின் எதிரொலியாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே தனது பதவியை வரும் 13-ம் தேதி ராஜினாமா செய்வார் என பாராளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிரதமர் மற்றும் அதிபர் பதவி விலகுவதாக அறிவித்துள்ள நிலையில் முக்கிய அமைச்சர்கள் பலரும் ராஜினாமா செய்துள்ளனர்.

விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

அனைத்துக் கட்சிகள் இணைந்து கூட்டாட்சி அரசை அமைக்க வழிவகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com