ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் - இலங்கை அதிபர் உறுதி

தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்றார்.
ராணுவம் கைப்பற்றிய தமிழர்களின் நிலங்கள் திரும்ப ஒப்படைக்கப்படும் - இலங்கை அதிபர் உறுதி
Published on

ராணுவத்தின் வசம் உள்ள வடக்குப் பகுதி தமிழர்களின் நிலங்கள் விரைவில் முழுமையாக அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக உறுதியளித்துள்ளார்.

1980 களில் இருந்து ஆயுதப் போராட்டத்தின் போது, ராணுவத் தேவைகளுக்காக அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் நிலங்களை அபகரித்தது.

குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் யாழ்ப்பாணம் நகரில் பலாலி இராணுவத் தளத்தைச் சுற்றி உயர் பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவதற்காக தமிழர்களுக்கு சொந்தமான சுமார் 3,500 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டன.

2009 இல் போர் முடிவுக்கு வந்த பின்னர் 2015 முதல் அவ்வாறு கைப்பற்றப்பட்ட நிலங்கள் சிலவற்றை அரசு உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைத்தது. இருப்பினும் தமிழ் மக்களுக்கு சொந்தமான பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்னும் அரசு வசமே உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிபராக  தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக வடக்கு பகுதியின் முக்கிய நகரமான யாழ்ப்பாணத்திற்கு திசநாயக நேற்று [வெள்ளிக்கிழமை] வருகை தந்தார். அங்கு யாழ்ப்பாண மாவட்ட பிரதிநிதிகளுடன் அங்குள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆலோசித்தார்.

அப்போது, வடக்குப் பகுதி தமிழர்களிடம் இருந்து ராணுவத்தால் கைப்பற்றப்பட்ட நிலங்கள் விரைவில் திரும்ப ஒப்படைக்கப்படும் என அவர் உறுதியளித்தார். இதற்கான செயல்முறை விரைவில் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு சென்று அங்கு நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அதிபர் அனுர குமார திசநாயக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com