உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளோம்: வடகொரியா அறிவிப்பால் தென்கொரியா அதிர்ச்சி...!

சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.ஜப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக செலுத்தியுள்ளோம்: வடகொரியா அறிவிப்பால் தென்கொரியா அதிர்ச்சி...!
Published on

ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பதை வடகொரிய வழக்கமாக கொண்டுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகள் விதித்த போதிலும், வடகொரிய அதற்கு கட்டுப்படாமல் தொடர்ந்து அதன் வேலையை செய்து வருகிறது.

உச்சக்கட்டமாக உளவு பார்க்கும் செயற்கைக்கோளை தயாரித்து அதை விண்ணில் செலுத்துவோம் என அறிவித்தது. இந்த உளவு செயற்கைக்கோள் கொரிய தீபகற்பம், ஜப்பான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ நடவடிக்கையை துல்லியமாக கண்டறியும். இதனால் தங்களது பாதுகாப்பை அதிகரித்து கொள்ள முடியும் என வடகொரிய தெரிவித்து வந்தது.

இந்த ஏவுகணையை செலுத்தினால், பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா நேரடியாக எச்சரித்து வந்தது.

ஆனால், சில மாதங்களுக்கு முன் உளவு பார்க்கும் செயற்கைக்கோளை செலுத்தியது. ஆனால், முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. செயற்கைக்கோளின் பாகங்களை சேகரித்த தென்கொரியா, அது உளவு பார்க்கும் திறனற்றது எனத் தெரிவித்தது.

ஆனால், வடகொரியா தனது முயற்சியை கைவிடாமல், 2-வது முறையாக முயற்சி செய்தது. 2-வது முறையாகவும் தோல்வியடைந்தது. அப்போதும் வடகொரியா மனம் தளறவில்லை.

தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதை சரி செய்தது. கடந்த இரண்டு நாட்களாக, நாங்கள் உளவு செயற்கைக்கோளை செலுத்த இருக்கிறோம் என ஜப்பானுக்கு தகவல் தெரிவித்தது. இதனால், தென்கொரியா தங்களது கவலையை தெரிவித்தது. ஜப்பான் எல்லையில் உள்ள கடற்பகுதியில்தான் வடகொரிய ஏவுகணை சோதனை நடத்தும் என்பதால் தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில், உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, சுற்றுப்பாதையில் நுழைந்ததாக என வடகொரியா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொரியா பதற்றம்-குறைப்பு ஒப்பந்தத்தின் ஒருபகுதியை சஸ்பெண்ட் செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, உளவு செயற்கைக்கோள் செலுத்தியதை ஜப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் வடகொரியா செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜப்பான் உறுதிப்படுத்தாத நிலையில், நாங்கள் அதுகுறித்து மதிப்பீடு செய்து வருகிறோம் என பென்டகன் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் செயல் ஐ.நா. தீர்மானத்தை மீறியது மட்டுமல்லாமல், நமது நாட்டின் பாதுகாப்பிற்கான பயங்கரமான ஆத்திரமூட்டல் செயல் என தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு கொள்கைக்கான துணை மந்திரி தெரிவித்துள்ளார்.

மேலும், 2018-ம் ஆண்டு போடப்பட்ட பதற்றம்-குறைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com