

சிங்கப்பூர் மக்கள்தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் சீன வம்சாவளியைச் சேர்ந்தவர்களாகவும், மலாய் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாகவும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிங்கப்பூரை இந்தியர்கள் ஆக்கிரமித்து பல்லின பண்பாட்டு கோட்பாட்டை சீர்குலைத்து வருவதாக, சீனாவை சேர்ந்த வலை தளத்திலிருந்து சர்ச்சைக்குரிய பதிவுகள் பகிரப்பட்டன.
இதையடுத்து, இந்திய சமூகத்தினரைக் குறிவைத்து சீனாவிலிருந்து பரப்பப்படும் பதிவுகளைத் தடுக்குமாறு யூடியூப், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் ஆகிய சமூக ஊடகத்தளங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் உத்தரவிட்டது.
இதுகுறித்து பேசிய உள்துறை அமைச்சர் எட்வின் டோங், “இந்தக் காணொளிகள் நமது பல்லின சமூகத்தைத் தாக்குவதோடு, இனத்தின் அடிப்படையில் மக்களைப் பிரிக்கவும் முயற்சிக்கின்றன.
இருப்பினும் இது நமது இயல்பு அல்ல. சிங்கப்பூரில் உள்ள ஒவ்வொரு சமூகமும் மதிக்கப்படுகிறது, மேலும் அனைவருக்கும் சமமான இடம் உண்டு.
சிங்கப்பூரின் இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முற்படும் எந்தவொரு கருத்தையும், குறிப்பாக அது வெளிநாட்டினரால் பரப்பப்படும்போது அவற்றை அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது.
சிங்கப்பூர் மக்கள், இணையத்தில் தாங்கள் பார்க்கும் விஷயங்களில் விவேகத்துடனும் கவனத்துடனும் இருக்க வேண்டும்.
அவை நமது சமூகக் கட்டமைப்பையோ, சமூக நல்லிணக்கத்தையோ பாதிக்கக்கூடும் என்றால், அவற்றைப் பரப்ப வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டார்.