சிந்து மாகாணத்தில் பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி

பாகிஸ்தானில் 2 சதவீதம் பேர் மட்டுமே இந்து மதத்தை சேர்ந்தவர்கள்மனிஷாவின் சகோதரிகளும் சகோதரனும் மருத்துவ கல்வி பயில்கின்றனர்
சிந்து மாகாணத்தில் பாகிஸ்தானின் முதல் இந்து பெண் டிஎஸ்பி
Published on

1947ல் ஒன்றுபட்ட இந்தியா சுதந்திரமடைந்த போது இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவானது.

இந்தியாவில் மதசார்பின்மை கடைபிடிக்கப்படுகின்றது. ஆனால், பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு நாடாகும். அங்கு 96.47 சதவீதம் மக்கள் இஸ்லாமிய மதத்தவர்கள்; 2.14 சதவீதம் பேர் மட்டுமே இந்துக்கள்.

இந்நிலையில், பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் முதல் பெண் துணை காவல்துறை கண்காணிப்பாளர் (DSP) பதவிக்கு 26 வயதான இந்து மதத்தை சேர்ந்த பெண் மனிஷா ரொபேடா (Manisha Ropeta) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தனது இந்த அரிய சாதனை குறித்து பேசிய மனிஷா, "பெண் என்னதான் கடினமாக படித்தாலும் மருத்துவப்பணி அல்லது ஆசிரியை பணியில் மட்டுமே செல்ல முடியும் என்பதை சிறு வயது முதலே நான் கேட்டு வந்துள்ளேன். காவல்துறையிலும், நீதிமன்றங்களிலும் பெண்கள் பணியாற்ற கூடாது எனும் நம்பிக்கையை தகர்ப்பதே எனது லட்சியமாக இருந்தது. பல குற்றங்களில் பாதிக்கப்படுவது பெண்ணினம்தான். சமுதாயத்தில் உள்ள பெண்களை காக்கும் விதமாக ஒரு பெண் பாதுகாவலர் தேவை என நினைத்ததால் காவல்துறையில் சேர்ந்தேன். நான் கடந்து வந்த பாதை எளிதானதாக இல்லையென்றாலும் எனக்கு பலரும் ஊக்கம் அளித்தனர்" என கூறினார்.

சிந்து மாகாணத்தின் ஜேக்கபாபாத் பகுதியை சேர்ந்த ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர் மனிஷா. மனிஷாவிற்கு 3 சகோதரிகளும் 1 சகோதரரும் உள்ளனர். அவரது தந்தை இறந்ததும், அவரது தாயார், தனது குழந்தைகளுடன் கராச்சி நகருக்கு இடம்பெயர்ந்தார்.

மனிஷாவுடன் உடன் பிறந்தவர்கள் அனைவரும் மருத்துவ கல்வி பயின்று வருகின்றனர். மனிஷாவும் மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வு எழுதி ஒரே ஒரு மதிப்பெண் வித்தியாசத்தில் இடத்தை தவற விட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்து மாகாண பொது சேவைகளுக்கான ஆணையம் நடத்தும் தேர்வுகளில் 468 தேர்வாளர்களில் 16-வது இடத்தை பிடித்து காவல்துறையில் இந்த உயர் பதவிக்கு வந்தவர் மனிஷா. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com