வாக்னர் கலக முயற்சியின்போது வங்கிகளில் இருந்து அதிக அளவில் பணத்தை எடுத்த ரஷிய மக்கள்

வாக்னர் படை திடீரென கலகத்தை ஏற்படுத்தி மாஸ்கோ நகர் நோக்கி செல்ல இருப்பதாக அறிவித்ததுபெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு கலக முயற்சியை முடிவுக்கு கொண்டு வந்தார்
வாக்னர் கலக முயற்சியின்போது வங்கிகளில் இருந்து அதிக அளவில் பணத்தை எடுத்த ரஷிய மக்கள்
Published on

உக்ரைன் மீது ரஷியப்படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. 500 நாட்களை தாண்டியும் தாக்குதல் நிறுத்தப்படவில்லை. உக்ரைனை எப்படி வீழ்த்துவது என்று ரஷியா யோசித்து வரும் நிலையில், வாக்னர் கூலிப்படை திடீரென ரஷியாவுக்கு எதிராக திரும்பியது. மாஸ்கோவை நோக்கி செல்ல இருப்பதாக அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் அறிவித்தார்.

வாக்னர் படை தலைவர் பிரிகோசினால் உண்டாக்கப்பட்ட இந்த கலகம், மிகப்பெரிய அளவில் ஆயுத கிளர்ச்சியாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜூன் 22-23-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களுக்குள் கலகம் முடிவுக்குள் கொண்டு வரப்பட்டது.

ரஷிய படைக்கும், வாக்னர் படைக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த மக்கள், தங்களது தேவைக்கான பணத்தை கையிருப்பாக வைத்துக்கொள்ள விரும்பினர். இதன்காரணமாக வங்கிகளில் உள்ள பணத்தை அவசர அவசரமாக எடுக்க தொடங்கினர்.

ஒருவேளை ஆயுத புரட்சி பெரிய அளவில் ஏற்பட்டால் உணவு மற்றும் அன்றாட செலவிற்கு பணம் தேவைப்படும் என்பதால் முன்னெச்சரிக்கை காரணமாக பணத்தை எடுத்தனர். ஜூன் 23-25-ந்தேதிகளில் சுமார் 1.1 பில்லியன் (இந்திய பண மதிப்பில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்) வங்கியில் இருந்து எடுக்கப்பட்டதாக ரஷியாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஜூன் மாதத்தில் மட்டும் 5 பில்லியன் அளவிற்கு மக்கள் பணத்தை எடுத்துள்ளனர். இதில் அந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும் 1 பில்லியன் அளவிற்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது. இது ஐந்தில் ஒரு பகுதியாகும்.

ஜூன் மாதத்தில் அதிக அளவில் பணம் எடுக்கப்பட்டாலும், ரஷியாவின் பணவியல் கொள்கையை இது பாதிக்காது என்று அந்நாட்டு மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இருந்தாலும் வாகனர் படையின் கலக முயற்சியால் ரஷியாவின் ருபெல் பணமதிப்பு 15 மாதத்தில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. ஏற்றுமதி வருவாயிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து பணத்தின் மதிப்பு குறைந்து வருவதால், இது பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் என பணவீக்கதையும் அதிகரிக்கும் என ரஷியாவின் மத்திய வங்கி கவர்னர் கவலை தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com