விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்ல தடை: கத்தார் ஏர்வேஸ்

வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 35-ஐ கடந்துள்ளது.இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.
விமானங்களில் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்ல தடை: கத்தார் ஏர்வேஸ்
Published on

பெய்ரூட்:

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் திடீரென வெடித்துச் சிதறின. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

லெபனான் தெற்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லாவினரின் வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இதற்கிடையே, வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 35-ஐ கடந்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் சதி இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.

இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட் விமான நிலையத்தில் பயணம் செய்யும் மக்கள் பேஜர் மற்றும் வாக்கி டாக்கிகளை விமானத்தில் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருகிறது என கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பயணிகள் தங்களுடனோ, தாங்கள் கொண்டு வரும் பைகளுடனோ பேஜர், வாக்கி டாக்கி ஆகியவற்றை வைத்திருக்க அனுமதிக்கப்படாது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லெபனான் விமான போக்குவரத்து ஆணையத்தின் அறிவுறுத்தலால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com