பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம்-டாக்டர்கள் தகவல்

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து சொந்த ஊருக்கு திரும்புவார்.
பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட பெண்ணின் உடல்நிலையில் முன்னேற்றம்-டாக்டர்கள் தகவல்
Published on

வாஷிங்டன்:

மருத்துவத் துறையில் செயற்கை உறுப்புகள் மற்றும் விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தி சிகிச்சை அளிக்கும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில் மரபணு மாற்றப்பட்ட பன்றியின் உறுப்புகளை பரிசோதனை செய்து வருகின்றனர். ஏற்கனவே மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சீறுநீரகம் 2 பேருக்கு பொருத்தப்பட்டது.

இந்த நிலையில் 3-வது நபராக அமெரிக்காவின் அலபாமாவைச் சேர்ந்த டோவானா லூனி (வயது 53) என்ற பெண்ணுக்கு, மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்டது.

இந்த ஆபரேசனை பன்றியின் சிறுநீரகம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வரும் அலபாமா பல்கலைக்கழக டாக்டர்கள் வெற்றிகரமாக செய்தனர்.

அதன்பின் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையே பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட டோவானா லூனி உடல்நிலையில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், அவருக்கு பொருத்தப்பட்ட சிறுநீரகம் நன்கு வேலை செய்வதாகவும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். சில பரிசோதனைகளுக்காக அவர் தற்காலிகமாக மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இன்னும் 3 மாதங்களில் பூரண குணமடைந்து அவரது சொந்த ஊருக்கு திரும்புவார் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்பு பன்றியின் சிறுநீரகம் அல்லது இதயம் பொருத்தப்பட்ட 4 பேரும் இரண்டு மாதங்களுக்குள் உயிரிழந்தனர். ஆனால் லூனியின் உடல்நிலையில் வேறு பாதிப்பு இல்லை எனவே, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் புதிய நம்பிக்கை பிறந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com