search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஒலிபரப்பின் போதே சுடப்பட்ட டிஜே - தொடரும் பத்திரிக்கையாளர்கள் கொலைகள்
    X

    ஒலிபரப்பின் போதே சுடப்பட்ட டிஜே - தொடரும் பத்திரிக்கையாளர்கள் கொலைகள்

    • கோல்ட் எஃப்எம் எனும் வானொலியில் ஜுவன் பணியாற்றி வந்தார்
    • பலவந்தமாக உள்ளே நுழைந்தவர்களில் ஒருவன் ஜுவனை சுட்டான்

    பிலிப்பைன்ஸ் நாட்டின் பத்திரிக்கையாளராகவும், வானொலி ஒலிபரப்பாளராகவும் இருந்தவர் 57 வயதான ஜுவன் ஜுமலோன். டிஜேவாக (DJ) ஜுவன், "டிஜே ஜானி வாக்கர்" எனும் புனைப்பெயரில் புகழ் பெற்றிருந்தார்.

    ஜுவன், மிசாமிஸ் ஆக்ஸிடென்டல் (Misamis Occidental) பகுதியில் உள்ள கோல்ட் எஃப் எம் 94.7 (Gold FM 94.7) எனும் வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

    இன்று காலை சுமார் 05:30 மணியளவில் வானொலி நிலையத்தில் உள்ள ஸ்டூடியோவில் நிகழ்ச்சியை ஒலிபரப்பி, டிஜேவாக நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்தார்.

    அப்போது அந்த நிலையத்திற்கு இருவர் அவரை தேடி வந்தனர். இரும்பு கதவுகளை தள்ளி விட்டு கொண்டு உள்ளே நுழைந்த அவர்கள் ஜுவன் இருந்த ஒலிபரப்பு அறைக்குள் பலவந்தமாக நுழைந்தனர்.

    அவர்களில் ஒருவன் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஜுவனை ஒரு முறை சுட்டான்; மற்றொருவன் வேறு யாரும் வருகின்றனரா என பார்த்து கொண்டிருந்தான். அங்கிருந்து புறப்படும் போது அவன், ஜுவன் அணிந்திருந்த நெக்லெஸையும் கழட்டி கொண்டு சென்றான்.

    அங்கிருந்து உடனடியாக ஜுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தின் போது அங்கிருந்த கேமிராவில் பதிவான காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    அந்நாட்டு பத்திரிக்கையாளர்கள் சங்கம் இந்த கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்த கொலை சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்டு மார்கோஸ் ஜூனியர், தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    1986லிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டில் நடக்கும் 199-ஆவது பத்திரிக்கையாளர் கொலை இது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×