

இந்தோனேசியாவின் மதுரா தீவுக்கு அருகே கடலில் பயணிகள் படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 41 பேரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தோனேசியாவின் சுரபயாவில் இருந்து இன்று காலை மக்காசரை நோக்கி சுமார் 250க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிக்கொண்டு ‘முதியாரா செந்தோசா 2’ என்ற கப்பல் சென்றுள்ளது.
கப்பல் புறப்பட்ட சிலமணிநேரங்களிலேயே மதுரா தீவுக்கு அருகே தீவிபத்து ஏற்பட்டுள்ளது. உடனே இதுகுறித்து கப்பல் கேப்டன் தகவல் அளிக்க பலரும் பாதுகாப்பு ஜாக்கெட்டுகளை அணிந்துகொண்டு கடலில் குதித்துள்ளனர். கடலில் குதித்தவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே மற்றவர்கள் மாற்றுக் கப்பல்கள் மூலம் மாற்றப்பட்டு, கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடலில் மாயமானவர்களை மீட்க அனைத்து பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் இந்தோனேசிய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.
படகில் தீ விபத்து ஏற்பட்டதற்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. 17,000க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியாவில், படகுப் போக்குவரத்து ஒரு பிரபலமான போக்குவரத்து முறையாகும்.
இங்கு, மோசமான பாதுகாப்புத் தரங்களால், போதுமான உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லாமலும், கப்பல்களில் அடிக்கடி அதிக சுமை ஏற்றப்படுவதால், விபத்துகள் சாதாரணமாக நிகழ்கின்றன.