

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத் அருகில் பாகிஸ்தான் விமானப்படையின் Mi-17 ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. இதில் ஹெலிகாப்டரில் உள்ள அனைவரும் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விவரம் வெளியிடப்படவில்லை. ஹெலிகாப்டர் டேக்-ஆஃப் ஆகும்போது டெக்னிக்கல் கோளாறு காரணமாக விபத்து நடந்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி எனும் அமைப்பிற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அரசில், காஷ்மீர் அகதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் 12 பதவிகளை நீக்கக் கோரிய வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், அதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த இரண்டு விவகாரத்தையும் கையில் எடுத்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று முன்தினம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று இந்த போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் பெரிய அளவில் சென்றது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் பலர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.