search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    கைது செய்தது சட்டவிரோதம்.. இம்ரான் கானை உடனே விடுதலை செய்யுங்க... உச்ச நீதிமன்றம் அதிரடி!
    X

    கைது செய்தது சட்டவிரோதம்.. இம்ரான் கானை உடனே விடுதலை செய்யுங்க... உச்ச நீதிமன்றம் அதிரடி!

    • இம்ரான் கானின் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.
    • நாளை இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்தனர். அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

    இதற்கிடையே நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், அவரை ஒரு மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து இம்ரான் கானை ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் பலத்த பாதுகாப்புடன் உச்ச நீதிமன்றத்திற்கு அழைத்து வந்து தலைமை நீதிபதி பந்தியால் தலைமையிலான அமர்வு முன்பு ஆஜர்படுத்தினர்.

    அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி, இம்ரான் கானை உடனடியாக விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் நாளை (வெள்ளிக்கிழமை) விசாரிக்க வேண்டும். விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும். உயர்நீதிமன்றம் என்ன முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார். இதையடுத்து இம்ரான் கான் விடுதலை செய்யப்பட்டார்.

    இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டபோது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. உச்ச நீதிமன்றத்தை சுற்றி உள்ள சாலைகள் மூடப்பட்டன.

    Next Story
    ×