பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப், சீனா பயணம்- அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்

பிரதமர் லி உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்திக்க செரீப் திட்டம்.பாகிஸ்தான் பிரதமருடன், அமைச்சர்கள் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பயணம்
 ஷபாஸ் செரீப், ஜி ஜின்பிங்
 ஷபாஸ் செரீப், ஜி ஜின்பிங்
Published on

பெய்ஜிங்:

சீன அதிபராக ஜி ஜின்பிங் 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் செரீப் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக சீனா சென்றுள்ளார். பிரதமராக பதவியேற்ற பிறகு செரீப் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

சீனப் பிரதமர் லீ கெகியாங்கின் அழைப்பின் பேரில் சீனா சென்றுள்ள பாகிஸ்தான் பிரதமருடன், அந்நாட்டு அமைச்சர்கள் பிலாவல் பூட்டோ சர்தாரி,இஷாக் தார், அக்சன் இக்பால், மரியம் ஔரங்கசீப்,சாத் ரபீக் ஆகியோர் அடங்கிய உயர்மட்டக்குழுவும் பங்கேற்றுள்ளது. தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் செரீப்பை சீன மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.

தமது பயணத்தின் போது அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் லி உட்பட சீன உயர்மட்டத் தலைவர்களை சந்திக்கும் பாகிஸ்தான் பிரதமர் இரு தரப்பு உறவுகள், அந்நாட்டுடனான வர்த்தகத்தை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

குவாதார் துறைமுகத்தை மேம்படுத்த சீனாவின் ஒத்துழைப்பு மற்றும் பல பில்லியன் டாலர் மதிப்பில் செயல்படுத்தப்படும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் குறித்தும் இந்த பேச்சுவார்த்தையின்போது ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com