நேபாள துணை பிரதமர் திடீர் ராஜினாமா

ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது.துணை பிரதமர் வெளியேறியபோதும் பிரசந்தா தலைமையிலான அரசுக்கு தேவையான மெஜாரிட்டி உள்ளது.
நேபாள துணை பிரதமர் திடீர் ராஜினாமா
Published on

காத்மண்டு:

நேபாளத்தில் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசந்தா தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி-என்) கட்சியில் உட்கட்சி பிரச்சனையால் கட்சி இரண்டாக உடைந்தது.

கட்சி தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவுக்கு எதிராக கட்சியின் மத்திய குழு தலைவர் அசோக் ராய் தலைமையிலான குழு போர்க்கொடி தூக்கியது. அதன்பின் இவர்கள் இணைந்து தனிக்கட்சியை உருவாக்கி தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தனர். தாய் கட்சியில் உள்ள நேபாளம் என்ற பெயரை நீக்கிவிட்டு, புதிய கட்சிக்கு ஜனதா சமாஜ்பதி கட்சி (ஜே.எஸ்.பி.) என பெயர் வைத்தனர். ஜனதா சமாஜ்பதி கட்சியை புதிய அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது.

சமீபகாலமாக ஆளும் கூட்டணிக்கும் நேபாள ஜனதா சமாஜ்பதி தலைவர் உபேந்திர யாதவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனை எதிர்கொள்வதற்காக பிரதமர் பிரசந்தாவின் ஆலோசனையின் பேரில் அசோக் ராய் கட்சியை உடைத்து புதிய கட்சியை பதிவுசெய்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும் துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் பிரசந்தா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் இருந்தும் வெளியேறினார். தனது ராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் வழங்கினார். அவருடன் அவரது கட்சியைச் சேர்ந்த வனத்துறை மந்திரி தீபக் கார்கியும் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.

உபேந்திர யாதவின் கட்சி வெளியேறியது பிரசந்தா தலைமையிலான அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. ஆனாலும் தற்போது கூட்டணி ஆட்சிக்கு தேவையான மெஜாரிட்டி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com