சுனிதா வில்லியம்ஸ் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் பூமி திரும்ப வாய்ப்பு: நாசா தகவல்

சுனிதா வில்லியம்சின் விண்வெளி பயணம் 8 மாதமாகும் என தகவல் வெளியானது.ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன உதவியுடன் அவர் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திரும்புகிறார்.
Sunita Williams
Published on

வாஷிங்டன்:

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்(58), மற்றொரு வீரரான புட்ச் வில்மோர்(61) ஆகியோர் கடந்த மாதம் 5-ம் தேதி ஸ்டார் லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்குச் சென்றனர். அங்கு அவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்

அவர்கள் திட்டமிட்டபடி 22-ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டார் லைனர் விண்கலத்தில் ஹீலியம் வாயுக்கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உருவானது. இதனால் நாசா விஞ்ஞானிகள் கவலை அடைந்தனர்.

இந்த பிரச்சனையால் கடந்த 50 நாட்களுக்கு மேலாக விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் சிக்கியுள்ளார். அவர்களை அழைத்து வர ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உதவியை நாசா நாடியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் கேப்சூல் எனப்படும் விண்கலன் உதவியுடன் அவர்களை அழைத்துவர உள்ளனர். 4 வீரர்கள் குழுவுடன் விண்வெளிக்குச் செல்லும் இந்த டிராகன் விண்கலன் அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் பூமிக்கு திரும்புமாம்.

ஸ்டார் லைனரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படாமல் சுனிதா திரும்புவதில் சிக்கல் நீடித்தால் இதுதான் ஒரே வழி ஆகும்.

இந்நிலையில், இந்த ஆண்டு ஜூன் மாதம் சென்றவர்கள் 8 மாதம் கழித்தே பூமி திரும்புவதால் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் தயார் செய்துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என நாசா தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com