வியட்நாமை புரட்டி எடுத்த யாகி சூறாவளி: பலி எண்ணிக்கை 127 ஆக உயர்வு

யாகி புயல் பாதிப்பால் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன.
வியட்நாமை புரட்டி எடுத்த யாகி சூறாவளி: பலி எண்ணிக்கை 127 ஆக உயர்வு
Published on

ஹனோய்:

வடமேற்கு பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவை தாக்கிய யாகி சூறாவளி புயல் கடந்த சனிக்கிழமை வியட்நாமை தாக்கியது.

வியட்நாமின் வடக்கு கடலோர பகுதி மாகாணங்களான குவாங் நின், ஹைபாங் ஆகிய பகுதிகளில் மணிக்கு 149 கி.மீ. வேகத்துடன் புயல் கரை கடந்தது. இதனால் பலத்த காற்றுடன் பல மணி நேரம் கனமழை கொட்டியது.

புயல் காரணமாக கடலோர பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

கனமழையால் சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. புயல் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டன. நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. மீட்புப் பணிகளில் ராணுவம், போலீசார் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

யாகி புயல் மற்றும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 21 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 176 பேர் காயம் அடைந்துள்ளனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. புயல் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. 50-க்கும் அதிகமானோரை காணவில்லை. நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

வியட்நாம் நாட்டில் பல தசாப்தங்களாக இல்லாத வகையில் யாகி புயல் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com