உள்நாட்டு போர் எதிரொலி: இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை

2023 முதல் ஆயுதமேந்திய பூர்வ குடிமக்களுக்கும் ராணுவத்திற்கும் போர் நடக்கிறதுதொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது
உள்நாட்டு போர் எதிரொலி: இந்திய வெளியுறவுத் துறை எச்சரிக்கை
Published on

இந்தியாவின் அண்டையில் உள்ள தென்கிழக்கு ஆசிய நாடு மியான்மர் (முன்னர் பர்மா). இதன் தலைநகரம் நேபிடா (Naypyidaw).

2021 பிப்ரவரி மாதம் அந்நாட்டு ராணுவம் உள்நாட்டு புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றியது.

இதை தொடர்ந்து ஜனநாயகத்தை மீண்டும் கொண்டு வர கோரும் உள்நாட்டு அமைப்புகளுக்கும் ராணுவத்திற்கும் போர் நடைபெற்று வருகிறது.

கடந்த 2023 அக்டோபர் முதல் ஆயுதமேந்திய அந்நாட்டு பூர்வ குடிமக்களுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடைபெறும் போரில் வன்முறை சம்பவங்களும் நடந்துள்ளன.

மியான்மர் ராணுவம் வான்வழி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

மியான்மரில் உள்ள ராக்கைன் (Rakhine) மாநிலத்தில் போர் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அங்கு தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பல வருடங்களாக மியான்மருக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வது வழக்கம்.

இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை (Ministry of External Affairs), ராக்கைன் மாநிலத்திற்கு செல்வதை தவிர்க்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

ராக்கைன் மாநிலத்தில் தொடர்ந்து நிலவி வரும் உள்நாட்டு பிரச்சனையால், அங்கு இந்தியர்களுக்கான பாதுகாப்பில் குறைபாடு ஏற்படலாம். மேலும் அங்கு தகவல் மற்றும் தொலைதொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்தியர்கள் ராக்கைன் மாநிலத்திற்கு பயணிக்க வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த மாநிலத்தில் தற்போது உள்ள இந்தியர்கள் அனைவரையும் அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வன்முறை அதிகரித்ததால், கடந்த பிப்ரவரி 1 அன்று வெளியுறவு துறை இது குறித்து கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com