அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்

வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என கோர்ட் உத்தரவு பிறப்பித்தது.ஆனால் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் டிரம்ப் விமர்சித்து வந்தார்.
அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7.5 லட்சம் அபராதம் விதித்த கோர்ட்
Published on

வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிபராக ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். நடப்பு ஆண்டு இறுதியில் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிபர் பைடன் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு இடையே போட்டி நிலவுகிறது. இதில் டிரம்புக்கு மக்களிடையே ஆதரவு பெருகி காணப்படுகிறது.

தொழிலதிபரான டிரம்ப் 2016-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டபோது, தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக கோர்ட்டில் விசாரணை நடந்துவருகிறது.

இதற்கிடையே, இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இந்நிலையில், கோர்ட்டை அவமதித்ததாகக் கூறி டிரம்ப் நேற்று கோர்ட்டில் ஆஜா்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவருக்கு 9,000 டாலர் (சுமார் ரூ.7.5 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். கோர்ட்டு உத்தரவை மீண்டும் மீறினால் சிறையில் அடைக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com