ஹார்வர்டு மாணவர்களின் பாலஸ்தீன ஆதரவிற்கு முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு

சுமார் 1000 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் தாக்குதலில் கொல்லப்பட்டனர்இரு பிரிவினருக்கும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தருகின்றன
ஹார்வர்டு மாணவர்களின் பாலஸ்தீன ஆதரவிற்கு முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு
Published on

கடந்த சனிக்கிழமை காலை பாலஸ்தீன பயங்கரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேல் மீது பெரும் தாக்குதல் நடத்தியது.

சுமார் 1000 இஸ்ரேலிய உயிர்களை பலி வாங்கிய இந்த தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேல், ஹமாஸ் மீது பதிலடி தாக்குதலை உடனடியாக துவங்கியது. அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஈரான், கத்தார் உள்ளிட்ட பல நாடுகள் ஹமாஸ் அமைப்பை ஆதரிக்கின்றன.

போராடும் இரு பிரிவினருக்கும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவின் புகழ் பெற்ற ஹார்வர்டு பல்கலைகழகத்தை சேர்ந்த 34 மாணவ அமைப்புகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து அறிக்கை வெளியிட்டன. "பல வருடங்களாக இஸ்ரேல் கடைபிடிக்கும் நிறவெறி கொள்கையே தற்போதைய போருக்கு காரணம்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கும் முன்னாள் ஹார்வர்டு மாணவர்களாக இருந்து தற்போது அமெரிக்க அரசியலில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பலர், இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள பிரதிநிதிகளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தை வலியுறுத்தியுள்ளனர்.

ஹார்வர்டு பல்கலைக்கழக தலைமை பொறுப்பில் உள்ள க்ளாடின் கே (Claudine Gay) மற்றும் டீன் பொறுப்பில் உள்ள 15 பேருக்கும் மேற்பட்டவர்கள், நேற்று வெளியிட்ட அறிக்கையில், "ஹமாஸ் தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகளை கேட்டு எங்கள் இதயம் நொறுங்குகிறது" என தெரிவித்திருந்தனர். ஆனால், மாணவர் அமைப்பின் குற்றச்சாட்டு குறித்து எந்த வாக்கியமும் அதில் இடம் பெறாதது விமர்சனங்களுக்கு வழி வகுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com