இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் ஐகோர்ட்

கைது நடவடிக்கையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கியது இஸ்லாமாபாத் ஐகோர்ட்
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் (வயது 70), இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்கு ஒன்றில் ஆஜராக வந்தபோது அவரை சுற்றி வளைத்து துணை ராணுவத்தினர் கைது செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையை கண்டித்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது.

நீதிமன்ற வளாகத்தில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவரது வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இம்ரான் கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று கூறியதுடன், அவரை உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிட்டது.

மேலும், இந்த வழக்கை இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு இம்ரான் கான் ஆஜராக வேண்டும் என்றும் கூறியிருந்தது. அதன்படி இன்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார். அப்போது அவரது ஜாமீன் மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அவருக்கு இடைக்கால நிவாரணமாக, 2 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது. அவரை கைது செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com