

அக்ரா:
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் முன்னாள் நிதித்துறை மந்திரி கென் ஒபோரி அட்டா (65). அவர் அரசு அலுவலகத்தை தனிப்பட்ட லாபத்துக்கு பயன்படுத்தி சுமார் ரூ.500 கோடி வரை மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பான வழக்கு தலைநகர் அக்ராவில் உள்ள கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, மருத்துவ காரணங்களுக்காக அவர் வெளிநாட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் தேடப்படும் நபராக கானா அரசாங்கம் அவரை அறிவித்தது. பின்னர் அவரை கைதுசெய்ய சர்வதேச போலீசின் உதவியை அரசாங்கம் நாடியது.
இந்நிலையில், வேறு நாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக சர்வதேச போலீசின் சிவப்பு பட்டியலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இது எந்த நாட்டுக்கும் தப்பிச் செல்லாமல் இருக்க உலகம் முழுவதும் உள்ள போலீசுக்கு அறிவுறுத்தப்படுவதை குறிக்கிறது.