அமெரிக்காவில் சோகம்: தனியாக மலையேற சென்ற இந்திய வம்சாவளி பி.எச்.டி மாணவர் உயிரிழப்பு!

விக்ரம் நடக்கக் கற்றுக் கொண்ட காலத்திலிருந்தே அவரது தாய் அவருக்கு மலையேற்றப் பயிற்சியைக் கொடுத்தார்.
Vikram Mubayi
SoloHiking Accident
Published on

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் தனியாக மலையேற்றம் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முனைவர் பட்டம் பெற்ற மாணவர் விக்ரம் முபாயி என்பவரது உடல், அவர் காணாமல் போன இரண்டு நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் சக மாணவர்களிடையேயும், அமெரிக்க வாழ் இந்தியர்களிடையேயும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

என்ன நடந்தது?

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியல் துறையில் பி.எச்.டி படித்து வந்த விக்ரம் முபாயி, கடந்த வார இறுதியில் கலிபோர்னியாவின் புகழ்பெற்ற 'பிக் பைன் லேக்ஸ்' பகுதிக்குத் தனியாக மலையேற்றம் சென்றுள்ளார்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி இரவு 8:30 மணியளவில், தான் இருக்கும் இடத்தின் ஜி.பி.எஸ் குறியீடுகளைத் தனது குடும்பத்தினருடன் விக்ரம் பகிர்ந்துள்ளார்.

அதன் பிறகு அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை; திட்டமிட்டபடி அவர் தங்கும் இடத்திற்கும் திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்குப் புகார் அளித்தனர்.

தீவிரத் தேடுதல் வேட்டை மற்றும் உடல் மீட்பு!

புகாரைத் தொடர்ந்து 'இன்யோ கவுண்டி' மீட்புக் குழுவினர் மற்றும் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்துப் படையினர் இணைந்து ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தீவிரத் தேடுதலுக்குப் பின், ஆகஸ்ட் 3-ஆம் தேதி மாலையில் 'இன்யோ தேசியப் பூங்கா' பகுதியில் விக்ரம் முபாயி உயிரிழந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பதற்கான அதிகாரப்பூர்வத் தகவல்களைப் புலனாய்வாளர்கள் இன்னும் வெளியிடவில்லை.

எனினும், இதில் எவ்வித சதித்திட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும், இயற்கை சீற்றம் அல்லது விபத்தினால் இது நேர்ந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

யார் இந்த விக்ரம் முபாயி?

ஹாங்காங்கில் பிறந்து வளர்ந்த விக்ரம், ஒரு திறமையான மலையேற்ற வீரர் மற்றும் சைக்கிள் ஓட்டுநர். "அவர் நடக்கக் கற்றுக் கொண்ட காலத்திலிருந்தே அவரது தாய் அவருக்கு மலையேற்றப் பயிற்சியைக் கொடுத்தார்" என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2022-ஆம் ஆண்டு இலினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், தற்போது கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக இருந்தார்.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில், பிளாஸ்டிக் மற்றும் தாவரக் கழிவுகளை பாக்டீரியாக்கள் மூலம் சிதைத்து, பெட்ரோலியத்திற்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு உகந்த புதிய எரிபொருளை உருவாக்கும் மிக முக்கியப் பல்லுயிர் ஆராய்ச்சியில் அவர் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com