பிரான்ஸில் தொங்கு பாராளுமன்றம் .. அதிக இடங்களைக் கைப்பற்றிய இடதுசாரி கூட்டணி- பிரதம மந்திரி ராஜினாமா

இரணடாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூலை 7] நடந்து முடிந்துள்ளதுபெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்கள் கிடைக்காததால் பிரான்சில் தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது
பிரான்ஸில் தொங்கு பாராளுமன்றம் .. அதிக இடங்களைக் கைப்பற்றிய  இடதுசாரி கூட்டணி- பிரதம மந்திரி ராஜினாமா
Published on

பிரான்சில் கடந்த மாத தொடக்கத்தில் நடந்த ஐரோப்பிய யூனியன் தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான தேசியவாத பேரணி கட்சி தற்போதைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சியை விட அதிக வெற்றியை பதிவு செய்தது. இதனால் கலக்கமடடைந்த மேக்ரான் கடந்த ஜூன் 9 ஆம் தேதி பிரான்ஸ் அவசர அவசரமாக பாராளுமன்றத் தேர்தலை அறிவித்தார். அதன்படி கடந்த ஜூன் 30 ஆம் தேதி முதல் சுற்று பாராளுமன்றத் தேர்தல் நடந்தது. முதல் சுற்றில் அதிகபட்சமாக 67 சதவீத வாக்குகள் பதிவானது.

இதனைத்தொடர்ந்து இரணடாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று [ஜூலை 7] நடந்து முடிந்துள்ளது. வாக்குப்பதிவு நேற்றைய நாளின் இறுதியில் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தற்போது யாரும் எதிர்பாராத வகையில் இடதுசாரி கட்சிகளின் கூட்டமைப்பான நியூ பாப்புலர் முன்னணி கூட்டமைப்பு முன்னிலை பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 577 தொகுதிகளில் 182 தொகுதிகளை இடது முன்னணி கைப்பற்றியுள்ளது. மேக்ரானின் நடுநிலை கட்சியான மறுமலர்ச்சி கட்சி 168 இடங்களில் வென்றுள்ளது. முதற்கட்ட தேர்தலில் முன்னிலை வகித்த வலதுசரியான தேசியவாத பேரணி கட்சி 143 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

தற்போதய நிலவரப்படி ஆட்சியமைக்க யாருக்கும் பெரும்பான்மைக்கு தேவையான 289 இடங்கள்  கிடைக்காததால் பிரான்சில் தொங்கு பாராளுமன்றம் அமையும் சூழல் ஏற்பட்டுள்ளது. இடது முன்னணியுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே தற்போதைய அதிபர் மேக்ரானின் மறுமலர்ச்சி கட்சி மீண்டும் ஆட்சியமைக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பான்மையை இழந்த மறுமலர்ச்சி கட்சியைச் சேர்ந்த பிரான்ஸ் பிரதம மந்திரி கேப்ரியல் அட்டல் அதிபர் மேக்ரானிடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com