

தென் அமெரிக்க நாடான கயானாவில் அண்மையில் நிகழ்ந்த மிக மோசமான கடல் விபத்தில், நீரில் மூழ்கிய படகில் இருந்து இதுவரை 27 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 'எம்.வி. பாரிமா' என்ற அந்தப் படகின் கேப்டன் உட்பட ஊழியர்கள் போதைப்பொருள் (கஞ்சா) பயன்படுத்தியிருந்தது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கயானாவின் தலைநகர் ஜார்ஜ்டவுனில் இருந்து வடமேற்குப் பகுதியில் உள்ள போர்ட் கைடூமா நோக்கிச் சென்று கொண்டிருந்த 'எம்.வி. பாரிமா' என்ற பயணிகள் படகு கடந்த சனிக்கிழமை இரவு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகின் உத்தியோகபூர்வ பதிவேட்டில் 116 பயணிகளும் 17 ஊழியர்களும் மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தனர்.
ஆனால், மீட்புப் பணியின் போது பட்டியலில் பெயரில்லாத 32 பேர் மீட்கப்பட்டதால், படகில் மொத்தம் 179 பேர் வரை பயணித்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை '69 பேர்' உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 27 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் 83 பேரைக் காணவில்லை. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
விபத்தைத் தொடர்ந்து படகின் கேப்டன் மற்றும் ஊழியர்களைக் காவலில் எடுத்துப் பரிசோதித்ததில், அவர்கள் கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதியானது."பணியில் இருக்கும்போது ஊழியர்கள் மது அருந்துவதையோ அல்லது போதைப்பொருள் பயன்படுத்துவதையோ எந்த வகையிலும் சகித்துக் கொள்ள முடியாது" என பொதுப்பணித்துறை அமைச்சர் ஜுவான் எட்ஜில் தெரிவித்துள்ளார்.
படகு முனையங்களில் உள்ள அதிகாரிகள் பயணிகளிடம் ரொக்கப் பணம் பெற்றுக்கொண்டு, பயணிகளின் உண்மையான எண்ணிக்கையைப் பதிவேட்டில் எழுதாமல் முறைகேடு செய்வதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஊழியர்களின் அலட்சியம் மற்றும் பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மார்க் பிலிப்ஸ் உத்தரவிட்டுள்ளார்.
கயானா அதிபர் இர்ஃபான் அலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உயிர்தப்பியவர்களையும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் விரைந்து வழங்கப்படும் என அவர் உறுதியளித்தார். கடந்த பல தசாப்தங்களில் கயானா கண்ட மிக மோசமான கடல் பேரிடராக இது பார்க்கப்படுகிறது.