search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காசாவின் கழுத்து நெரிக்கப்படுகிறது: ஐ.நா. நிவாரண பணி முகமை தகவல்
    X

    "காசாவின் கழுத்து நெரிக்கப்படுகிறது": ஐ.நா. நிவாரண பணி முகமை தகவல்

    • ஐ.நா. உள்ளிட்ட மனிதாபிமான அமைப்புகளின் கோரிக்கையை இஸ்ரேல் நிராகரித்தது
    • உலகம் கண்டிராத ஒரு மனித குல பேரழிவு நடப்பதாக அந்த முகமை தெரிவித்தது

    பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் புரிந்து வரும் இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர், உணவு, மருந்து பொருட்கள், எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதை முற்றிலுமாக தடுத்து விட்டது. காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்க ஒரு வழித்தடம் அமைத்து தரவேண்டும் என ஐ.நா. உள்ளிட்ட பல மனிதாபிமான அமைப்புகள் இஸ்ரேலிடம் வைத்த கோரிக்கையையும் இஸ்ரேல் நிராகரித்து விட்டது.

    வான்வழி தாக்குதலை தொடர்ந்து தரைவழி தாக்குதலையும் தொடங்க இருப்பதாகவும், அதனால் காசா பகுதியில் வாழும் லட்சக்கணக்கான பொதுமக்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் இஸ்ரேல் கெடு விதித்திருந்தது. இஸ்ரேல் விதித்திருந்த கெடு முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கிருந்து வெளியேற தொடங்கி விட்டனர்.

    இதற்கிடையே, கிழக்கு ஜெருசேலம் பகுதியில் ஐ.நா. கூட்டமைப்பின் நிவாரண பணி முகமை (UN Relief And Works Agency) அமைப்பின் தலைவர் பிலிப் லசாரினி (Philippe Lazzarini) காசா பொதுமக்களின் துயரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    உலகம் மனிதாபிமானத்தை இழந்து விட்டது. எங்கள் அமைப்பை சேர்ந்தவர்களால் எந்த மனிதாபிமான உதவிகளையும் காசா மக்களுக்கு வழங்க முடியவில்லை. காசாவின் கழுத்து நெரிக்கப்பட்டு வருகிறது. குடிநீர்தான் 'உயிர்' - ஆனால் காசாவில் குடிநீர் இல்லை; ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லை. காசாவின் 'உயிர்' பிரிந்து கொண்டிருக்கிறது. விரைவில் உணவு மற்றும் மருந்து ஆகியவையும் கிடைப்பது நின்று விடும். கடந்த 8 நாட்களாக காசாவில் ஒரு சொட்டு தண்ணீர் இல்லை; ஒரு கோதுமை தானியம் கூட இல்லை; ஒரு லிட்டர் எரிபொருள் கூட இல்லை. அங்கு இதுவரை உலகம் கண்டிராத ஒரு மனிதகுல பேரழிவு நடந்து வருகிறது. பாதுகாப்பான இடம் என அங்கு எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இன்று (அக்டோபர் 16) உலகம் முழுவதும் "உலக உணவு தினம்" கொண்டாடப்படும் வேளையில், லட்சக்கணக்கான காசா மக்களுக்கு உணவு, வசிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய தேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளது கவலை தரும் நிகழ்வு என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    Next Story
    ×