இம்மானுவல் மேக்ரானுடன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு - உக்ரைனுக்கு பீரங்கிகள், கவச வாகனங்கள் அனுப்ப பிரான்ஸ் முடிவு

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பாரீஸ் நகருக்குச் சென்று அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்தார்.அதன்பின், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார்.
இம்மானுவல் மேக்ரானுடன் அதிபர் ஜெலன்ஸ்கி சந்திப்பு - உக்ரைனுக்கு பீரங்கிகள், கவச வாகனங்கள் அனுப்ப பிரான்ஸ் முடிவு
Published on

பாரீஸ்:

ரஷியாவின் ஆதிக்கத்தில் இருந்து மக்களைக் காப்பாற்றும் நோக்கில் பல்வேறு நாடுகளிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உதவிகளை கோரி வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு பெரிய நாடுகளுக்கு அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகருக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சென்றார். அவர், அந்நாட்டு அதிபர் இம்மானுவல் மேக்ரானை எலிசீ அரண்மனையில் சந்தித்துப் பேசினார். அதன்பின் இரவு விருந்திலும் கலந்து கொண்டார்.

இந்நிலையில், உக்ரைனுக்கு வேண்டிய ஆயுதங்களை வழங்கும் அறிவிப்பை பிரான்ஸ் அதிபர் வெளியிட்டார். உக்ரைன் நாட்டுக்கு ஆதரவாக போர் புரிவதற்காக, கூடுதலாக இலகுரக பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களை அனுப்ப பிரான்ஸ் அரசு முடிவு செய்து உள்ளது. இவற்றில், ஏ.எம்.எக்ஸ்.-10ஆர்.சி. ரக பீரங்கிகளும் அடங்கும். அவை போர்க்களத்தில் விரைவாக இயங்கக்கூடியவை. ஓரிடத்தில் இருந்து தனது நிலையை எளிதில் மாற்றும் திறன் பெற்றவை. உக்ரைனிய படைகளுக்கு அவற்றை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிகளையும் பிரான்ஸ் வழங்க இருக்கிறது.

இரு நாட்டு தலைவர்களும் 3 மணிநேர பேச்சுவார்த்தைக்கு பின் அளித்த கூட்டறிக்கையில் மேற்கூறிய தகவலை வெளியிட்டனர்.

உக்ரைனுக்கு அரசியல், நிதி, மனிதநேய மற்றும் ராணுவ உதவிகளை எவ்வளவு காலத்திற்கு தேவைப்படுமோ அதுவரையில் பிரான்ஸ் அரசு தொடர்ந்து வழங்கி ஆதரவளிக்கும் என மேக்ரான் மீண்டும் வலியுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com