

அமெரிக்க அதிபராக வரும் ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவி ஏற்கிறார். கனடாவை அமெரிக்காவின் 51 வது மாகாணமாக இணைக்க முனைப்பு காட்டி வரும் டிரம்ப் அதற்காக அந்நாட்டின் மீது பொருளாதார அழுத்தத்தை கொடுப்பேன் என்றும் அச்சுறுத்தியுள்ளார். அமெரிக்கக் கொடியால் வரையப்பட்ட இரு நாடுகளின் ஒருங்கிணைந்த வரைபடத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
டிரம்ப் தனது புளோரிடா மார்-ஏ லாகோ தோட்டத்தில் செய்தியாளர் கூட்டத்தில், கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க "பொருளாதார சக்தியை" பயன்படுத்துவேன் என்று தெரிவித்தார்.
பனாமா கால்வாய் மற்றும் கிரீன்லாந்து இரண்டும் அமெரிக்காவுடன் இருக்க வேண்டிய பகுதிகள். அவற்றை கைப்பற்ற படைகளை கூட அனுப்புவேன்.தேவைப்பட்டால் மொத்த ராணுவத்தை கூட அனுப்புவேன்.
அதேபோல் கனடாவுக்கு பொருளாதார அழுத்தம் தருவேன். மெக்சிகோவும் அமெரிக்காவின் அங்கமாக இருக்க வேண்டும். செஸ் விளையாடுவது போலத்தான். இவர்களுக்கும் பொருளாதார தடை உள்ளிட்ட அழுத்தங்களை கொடுப்பேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க வாய்ப்பில்லை என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கனடா பிரதமராக கடந்த 9 ஆண்டுகள் பதவி வகித்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ தனது பிரதமர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாக ஜன. 6-ல் அறிவித்தார். புதிய லிபரல் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் போது பதவியை ராஜிநாமா செய்வதாக அவர் அறிவித்திருக்கிறார்.