என் மலர்
உலகம்

கிரீஸ் நாட்டில் ரெயில்வே அலுவலகம் அருகே குண்டு வெடிப்பு
- குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.
- போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரீஸ் தலைநகர் ஏதென்சில் அந்நாட்டின் முக்கிய ரெயில்வே நிறுவனமான ஹெலெனிக் டிரெயின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் அருகே திடீரென்று குண்டுவெடித்தது. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினார்கள். பரபரப்பான அப்பகுதியில் குண்டுவெடித்ததால் பீதி நிலவியது. சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு வேறு குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்று சோதனை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, சின்க்ரூ அவென்யூவில் உள்ள ஹெலெனிக் டிரெயின் நிறுவனத்தின் கட்டிடத்திற்கு அருகில் வெடிக்கும் சாதனம் கொண்ட ஒரு பை வைக்கப்பட்டிருந்தது என்றனர்.
இதற்கிடையே குண்டுவெடிப்புக்கு சற்று நேரத்திற்கு முன்பு ஒரு செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசியில் பேசிய நபர், ரெயில்வே நிறுவன அலுவலகங்களுக்கு வெளியே குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 40 நிமிடங்களுக்குள் வெடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
இந்த குண்டுவெடிப்பில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






