கட்டப்பட்டு வந்த தண்ணீர் பூங்காவில் கட்டுக்கடங்காத தீ: 16 பேர் காயம்

லைஸ்பர்க் பார்க்கின் விரிவாக்கமாக ஓஷியானா பார்க் உருவாகியதுகாணாமல் போன ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்
கட்டப்பட்டு வந்த தண்ணீர் பூங்காவில் கட்டுக்கடங்காத தீ: 16 பேர் காயம்
Published on

வட ஐரோப்பாவில் உள்ள நாடு, ஸ்வீடன். இதன் தலைநகரம் ஸ்டாக்ஹோம் (Stockholm).

ஸ்வீடனின் மேற்கு கடற்கரையோர நகரம், கோதன்பர்க் (Gothenburg).

இந்நகரில் "ஓஷியானா வாட்டர் பார்க்" (Oceana water park) எனும் புதிய தண்ணீர் பூங்கா கட்டப்பட்டு வந்தது. "லைஸ்பர்க் அம்யூஸ்மென்ட் பார்க்" (Liseberg Amusement Park) எனும் பொழுதுபோக்கு பூங்காவின் விரிவாக்கமாக இது உருவாகி வந்தது.

நேற்று, ஓஷியானா தண்ணீர் பூங்காவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. கட்டுமானம் முடிந்து, பயன்பாட்டிற்கு இன்னும் வராத பல நீர்சறுக்கு அமைப்புகள் தீக்கிரையாகின.

அப்பகுதி முழுவதும் கருமண்டலம் போல் புகை சூழ்ந்தது.

இந்த தீ விபத்தில் 16 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை. ஆனாலும், ஒருவர் காணவில்லை என்றும் அவரை தேடும் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்திற்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை.

தண்ணீர் பூங்காவை சுற்றியுள்ள ஒரு ஓட்டல் மற்றும் அருகிலிருந்த அலுவலகங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும், தீ முழுவதுமாக அணைக்கும் வரை தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும், ஜன்னல்களையும் கதவுகளையும் தாழிட்டு கொள்ளவும் அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியாற்றி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

அப்பகுதி முழுவதும் எரிந்த பிளாஸ்டிக் வாடை வீசுவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com