search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    போர் நிறுத்தம் முடிந்ததால் தாக்குதல் தீவிரம்: காசா மீது விடிய விடிய குண்டு வீச்சு- 180 பேர் பலி
    X

    போர் நிறுத்தம் முடிந்ததால் தாக்குதல் தீவிரம்: காசா மீது விடிய விடிய குண்டு வீச்சு- 180 பேர் பலி

    • தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.
    • காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

    காசா:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் கடந்த அக்டோபர் 7-ந்தேதி தொடங்கியது. இதில் காசா மீது இஸ்ரேல் மும்முனை தாக்குதல் நடத்தியதில் 14,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலால் காசாவில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரை மட்டாகின. இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் இஸ்ரேல் பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான பேச்சுவாார்த்தை மூலம் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

    கடந்த 24-ந்தேதி தொடங்கிய போர் நிறுத்தம் 7 நாட்கள் நீடித்தது. இதில் 83 இஸ்ரேல் பிணைக் கைதிகள், 24 வெளிநாட்டினரை ஹமாஸ் விடுத்தது. அதே போல் இஸ்ரேல் சிறைகளில் இருந்து 240 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அரசு விடுதலை செய்தது.

    போர் நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. போர் நிறுத்தத்தை மேலும் நீட்டிக்க கத்தார் நாடு முயற்சித்தது. ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

    இதையடுத்து காசா மீது இஸ்ரேல் தனது போர் தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியது. தெற்கு காசாவில் இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுகளை வீசின.

    அதே போல காசாவின் மற்ற பகுதிகளிலும் தாக்குதல் நடத்தப்பட்டன. குண்டு வீச்சால் பல இடங்களில் கடும் புகை எழும்பின. காசா மீது இஸ்ரேல் விடிய, விடிய தாக்குதல் நடத்தியது. தெற்கு காசாவில் உள்ள கான்யூனுசின் கிழக்கு பகுதிகளில் சரமாரியாக குண்டுகள் வீசப்பட்டன.

    போர் நிறுத்தத்துக்கு பிறகு முதல் நாள் தாக்குதலில் 180 பாலஸ்தீனியர்கள் பலியானார்கள்.

    இது தொடர்பாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறும்போது, நேற்று காலை இஸ்ரேல் தனது தாக்குதலை மீண்டும் தொடங்கிய 2 மணி நேரத்தில் 180-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 589 பேர் காயம் அடைந்துள்ளனர்.

    காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் இன்னும் தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் காசா மக்கள் உயிரை கையில் பிடித்தப்படி தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

    காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் நோய், மரணம் மற்றும் அழிவு ஆகியவற்றை எதிர்கொண்டு இருப்பதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் 126 இஸ்ரேலியர்கள், தாய்லாந்தை சேர்ந்த 8 பேர், நோபளம், தான்சானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 137 பேர் பிணைக் கைதிகளாக இன்னும் உள்ளனர் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×