ஒலிம்பிக் விழா தொடங்கவுள்ள நிலையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு- நாசவேலை காரணமா?

ஒலிம்பிக் தொடக்க விழா இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.10,714 விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
ஒலிம்பிக் விழா தொடங்கவுள்ள நிலையில் மெட்ரோ ரெயில் சேவை பாதிப்பு- நாசவேலை காரணமா?
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் இன்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 117 விளையாட்டு வீரர்கள் உள்பட மொத்தமாக 10,714 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்திய நேரப்படி இன்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் தொடக்க விழா நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் இந்த தொடரில் இடம் பெற்ற 10,714 விளையாட்டு வீரர்கள் 600 படகுகளில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பிரதான ரெயில் வழித்தடங்களில் ஒரே நேரத்தில் திட்டமிட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸின் அதிவேக ரெயில் சேவையை மர்ம நபர்கள் நாசவேலை செய்து முடக்கியிருக்கும் சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஒட்டுமொத்த போக்குவரத்து அமைப்பும் சீர்குலைக்கப்பட்டு இருப்பதாக, அரசு போக்குவரத்து நிறுவனமான எஸ்என்சிஎப் தகவல் தெரிவித்துள்ளது.

இந்த தீ விபத்து தாக்குதலால், பல வழித்தடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுமார் 8 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீ விபத்து காரணமாக, பாரிஸ் மற்றும் லில்லி இடையே அதிவேகப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பாரிஸூக்கு செல்லும் மற்றும் வரும் அதைத்து அதிவேக ரெயில்களும் இன்று கிளாசிக் பாதை வழியாக திருப்பி விடப்படுகின்றன. இது பயண நேரத்தை சுமார் ஒன்றரை மணி நேரம் நீட்டிக்கிறது.

ரெயில்கள் வெவ்வேறு தடங்களுக்கு திருப்பி விடப்பட்டன. ஆனால் அவற்றில் அதிக எண்ணிக்கையை நாங்கள் ரத்து செய்ய வேண்டியிருக்கும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஜூலை 29 திங்கட்கிழமை இயல்பான போக்குவரத்து மீண்டும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று ரெயில் புறப்படும் மண்டபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com