அதிகரிக்கும் வெப்பத்தால் நூற்றுக்கணக்கான டால்பின்கள் பலி: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டதுபரப்பளவில் அமேசான் காடு ஆஸ்திரேலியா அளவிற்கு பரந்து விரிந்துள்ளது
அதிகரிக்கும் வெப்பத்தால் நூற்றுக்கணக்கான டால்பின்கள் பலி: சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை
Published on

பிரேசில் நாட்டின் வடமேற்கில் தொடங்கி கொலம்பியா, பெரு உட்பட பல தென் அமெரிக்க நாடுகள் வரை பரவியுள்ளது அமேசான் மழைக்காடு.

வடக்கு பிரேசிலில் அமேசோனாஸ் (Amazonas) மாநிலத்தின் தலைநகரமான மனோஸ் (Manaus) நகருக்கருகே உள்ளது டெஃப் (Tefe) பிராந்தியம். இப்பகுதியிலும் அமேசான் காடுகள் பரவியுள்ளது. இப்பகுதி முழுவதிலும் சமீப காலமாக பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர் நிலைகளில் வெப்பம் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. ஒரு சில இடங்களில் வெப்பம் 102 டிகிரி ஃபேரன்ஹீட் அளவை தொட்டு விட்டது.

இதன் காரணமாக இங்குள்ள டெஃப் ஏரியில் நூற்றுக்கணக்கான டால்பின்கள் உயிரிழந்து மிதக்கின்றன.

"இத்தகைய சம்பவம் இதற்கு முன்பு நடைபெறாதது. டால்பின் மீன்கள் இறந்ததற்கும் அதிகளவு வெப்பத்திற்கும் உறுதியான தொடர்புள்ளது. ஆனால், வெப்பநிலை அதிகரிப்பதற்கான காரணத்தை இதுவரை கண்டறிய முடியவில்லை" என பிரேசில் அறிவியல் துறையின் ஆதரவில் இயங்கும் மமிரவா நிறுவனம் (Mamiraua Institute) தெரிவித்துள்ளது.

உயர்ந்து வரும் வெப்ப நிலை காரணமாக அமேசான் காடுகளில் உள்ள நீர்மட்டமும் குறைந்து கொண்டே வருகிறது. பரப்பளவில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் அளவிற்கு பரந்து விரிந்துள்ள இக்காடுகளில் இது போன்ற வானிலை நிகழ்வுகள் நடைபெறுவதால் 1 லட்சம் பேருக்கும் மேற்பட்டோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கு எதிரான பல நடவடிக்கைகளில் மனிதர்கள் ஈடுபட்டு வருவதால் இது போன்ற விசித்திரமான பருவநிலை மாற்றங்கள் ஏற்படலாம் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். இந்த நிகழ்வு அதனை உறுதிப்படுத்துவதாக உள்ளதாக சமூக வலைதளங்களில் கருத்து நிலவுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com