

அமேசான் நிறுவனம் 2025ஆம் ஆண்டில் உலகளவில் உள்ள தனது டேட்டா சென்டர்களைக் குளிர்விக்க 946 கோடி லிட்டர் தண்ணீரைப் பயன்படுத்தியதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இது அந்நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள சியாட்டில் பெருநகரம் ஓராண்டில் பயன்படுத்தும் அளவில் சுமார் 5 சதவீதம்தான் எனவும் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் தங்களின் தண்ணீர் பயன்பாடு குறைவுதான் எனவும் விளக்கமளித்துள்ளது.
டேட்டா சென்டர்களின் எண்ணிக்கையும், அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கமும் உலகளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில் அமேசானின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அமேசான் தனது டேட்டா சென்டர்களில் சுமார் 90% நேரங்களில் காற்றைக் கொண்டே குளிர்விப்பதாகவும், கடுமையான கோடைக்கால நாட்களில் மட்டுமே தண்ணீரைப் பயன்படுத்துவதாக அதன் வலைச் சேவைகளின் துணைத் தலைவரான கெர்ரி பெர்சன் தெரிவித்துள்ளார்.
உதாரணமாக, ஃபீனிக்ஸ் பகுதி மற்றும் சவூதி அரேபியா போன்ற, நீர் பற்றாக்குறை உள்ள சில பிராந்தியங்களில் உள்ள ஆலைகள், குளிரூட்டுவதற்காக வெளிப்புற நீர் ஆதாரங்களைச் சார்ந்திருப்பதில்லை என்றும், அதற்குப் பதிலாக, குளிர்பதனப் பொருள் மற்றும் நீரை மூடிய சுழற்சி முறைகளில் இயக்கும் காற்றுவழி குளிர்விப்பான்களைப் பயன்படுத்துகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
2024-ல் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 0.15 லிட்டராக இருந்த இந்த பயன்பாட்டு அளவு, தற்போது குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. மைக்ரோசாஃப்டின் சமீபத்திய அறிவிப்பில், அதன் நீர் பயன்பாட்டுத் திறன் ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு 0.27 லிட்டராக இருந்தது.
நீர்நிலைகளை மீட்டெடுத்தல், கிணறுகள் மற்றும் நீர் அமைப்புகளைப் புதுப்பித்தல் உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதியளிப்பதன் மூலம், 2030-ஆம் ஆண்டுக்குள் தான் எடுக்கும் நீரை விட அதிக நீரைச் சுற்றுச்சூழலுக்கும் மற்ற பயனர்களுக்கும் திருப்பிக் கொடுப்பதை ஒரு இலக்காக நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.