search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் விடுதலை
    X

    மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் வழக்கில் விடுதலை

    • 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார்.
    • இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    கோலாலம்பூர் :

    மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார்.

    அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக நஜீப் ரசாக் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் மற்றும் 1எம்.டி.பி. நிறுவனத்தின் அதிகாரிகள் பலர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    இதில் 1எம்.டி.பி. ஊழல் தொடர்பான முதல் வழக்கில் நஜீப் ரசாக்குக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதனிடையே 1எம்.டி.பி. ஊழல் தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையை மாற்றியமைக்க நஜீப் ரசாக், பிரதமர் மற்றும் நிதிமந்திரியின் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று இறுதி விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் நஜீப் ரசாக் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதரங்கள் இல்லை என கூறி அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தனர்.

    மேலும் நஜீப்புக்கு உடந்தையாக இருந்ததாக கூட்டுக் குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு விசாரணையின் போது அரசு தரப்பு சாட்சியாக ஆஜரான 1எம்டிபி முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான அருள் கந்தசாமியும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

    Next Story
    ×