

மதுரை:
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் (வயது 25). கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது இரண்டு பூனைகள் சண்டையிட்டு கொண்டிருந்ததை கண்டு அதை விரட்டியுள்ளார். அப்போது ஒரு பூனை பாலமுருகனை கடித்துள்ளது.
இதற்கு சிகிச்சை பெறாமல் பாலமுருகன் அலட்சியமாக விட்டுவிட்ட நிலையில், புண் பெரிதானது. பின்னர் இதற்காக அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்ற பின்னர் அங்கிருந்து அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.
பின்னர் பூனைக்கடியால் பாதிக்கப்பட்ட பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனை ரேபிஸ் சிகிச்சை வார்டில் நேற்று இரவு அனுமதித்து உள்ளனர். அங்கு இருக்க பிடிக்காமல் திடீரென்று தப்பி ஓட முயன்றவரை, மருத்துவமனை ஊழியர்கள் மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து சிகிச்சைக்காக ரேபிஸ் சிகிச்சை பிரிவில் தனி அறையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், கடுமையான வலி மற்றும் மன உளைச்சல் காரணமாக பாலமுருகன், அதிகாலை அவருக்கு வழங்கப்பட்டிருந்த போர்வையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூனைக்கடித்து அலட்சியமாக விட்டதால் மூன்று மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய உடல் நலக்குறைவு ஏற்பட்டு இளைஞர் தனியாக சிகிச்சைக்காக அடைக்கப்பட்ட நிலையில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.