எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் நல விழிப்புணர்வுக் கருத்தரங்கம்...

மனநலம் பற்றிய பல்வேறு கருத்துகளைப் பற்றி உரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி மகளிர் நலனில் கல்லூரியின் அர்ப்பணிப்பு உணர்வை எடுத்துக்காட்டுகிறது.
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் நல விழிப்புணர்வுக் கருத்தரங்கம்...
Published on

எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம் உன்னத் பாரத் அபியான் மற்றும் மாதா மருத்துவமனை ஆகியவை இணைந்து நேற்று கல்லூரித் திரையரங்கில் மகளிர் நல விழிப்புணர்வுக் கருத்தரங்கத்தை நடத்தின. கல்லூரித் தாளாளர் வெங்கடேஷ் ராஜா, இயக்குநர் முனைவர் சாய் சத்யவதி, முதல்வர் முனைவர் மாலதி செல்வக்குமார் ஆகியோரின் மேலான ஆதரவுடன் நடைபெற்ற இக்கருத்தரங்கத்திற்குச் சிறப்பு விருந்தினர்களாக மாதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறைத்தலைவர் டாக்டர் ஜோஸ்பின் ரோஸி அவர்களும், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்துறைப் பேராசிரியர் டாக்டர் விஜயலட்சுமி ஞானசேகரன் அவர்களும், தாகூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத் துறையின் மேனாள் பேராசிரியர் டாக்டர் பிரேமலதா அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

டாக்டர் ஜோஸ்பின் ரோஸி அவர்கள் மகளிருக்குத் தேவையான ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு, உணவு மேலாண்மையைக் கையாளும் முறை, நல்ல உறக்கம் ஆகிய உடல் நலனைப் பேணுகின்ற வழிமுறைகள் பற்றிக் குறிப்பிட்டார்.

அடுத்து உரை நிகழ்த்திய டாக்டர் விஜயலட்சுமி ஞானசேகரன் அவர்கள் மாதவிடாய் பற்றிய பிரச்சனைகள், மாதவிடாயை நேர்மறையாக எதிர்கொள்ளுதல், மகளிர்க்கு ஏற்படும் நோய்கள், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணர்வு போன்ற பல கருத்துகளை முன் வைத்தார்.

டாக்டர் பிரேமலதா அவர்கள் மகளிர் மனநலம், ஆரோக்கியமான மனநலத்தைப் பாதுகாத்தல், நேர்மறை எண்ணங்களை வளர்த்தல் போன்ற மனநலம் பற்றிய பல்வேறு கருத்துகளைப் பற்றி உரை நிகழ்த்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக மாணவிகள் மற்றும் பேராசிரியர்களின் பல்வேறு வினாக்களுக்கு மகளிர் நல மருத்துவர்கள் பதில் அளித்து பல்வேறு ஐயங்களைத் தீர்த்து வைத்தனர். இந்நிகழ்ச்சி மகளிர் நலனில் கல்லூரியின் அர்ப்பணிப்பு உணர்வை எடுத்துக்காட்டுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com