3 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை- கணவர் இறந்த 3 நாட்களில் விபரீத முடிவு

ஈஸ்வரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது.தான் இறந்து விட்டால் குழந்தைகள் அநாதையாகி விடுமே என்று கருதிய பாண்டீஸ்வரி, அவர்களையும் கொல்ல திட்டமிட்டார்.
3 குழந்தைகளை கொன்று இளம்பெண் தற்கொலை- கணவர் இறந்த 3 நாட்களில் விபரீத முடிவு
Published on

விருதுநகர்:

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூரை சேர்ந்தவர் ஈஸ்வரன், விவசாயி. இவரது மனைவி பாண்டீஸ்வரி(வயது35). இவர்களுக்கு வைத்தீஸ்வரி (16), காளீஸ்வரி(11) என்ற 2 மகள்களும், 1 வயதில் விக்னேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். இதில் வைத்தீஸ்வரி மகாராஜபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பும், காளீஸ்வரி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

இந்த நிலையில் ஈஸ்வரனுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அவர் கடும் அவதியடைந்தார். பல மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதன் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஈஸ்வரன் பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது மனைவி பாண்டீஸ்வரி மற்றும் மகள்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஈஸ்வரனின் இழப்பை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. உறவினர்கள் இறுதி சடங்குகளை முடித்து விட்டு சென்றபின் வீட்டில் பாண்டீஸ்வரி தனது மகள்கள் மற்றும் மகனுடன் தனியாக இருந்தார். கணவர் இறந்தபின் வாழ விருப்பமில்லாத அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து கொண்டதாக தெரிகிறது.

தான் இறந்து விட்டால் குழந்தைகள் அநாதையாகி விடுமே என்று கருதிய பாண்டீஸ்வரி, அவர்களையும் கொல்ல திட்டமிட்டார். அதன்படி நேற்று இரவு கோட்டையூரில் அவர்களுக்கு சொந்தமான தோட்டத்துக்கு மகள்கள் மற்றும் மகனை அழைத்துச் சென்ற பாண்டீஸ்வரி அங்குள்ள கிணற்றில் முதலில் 2 மகள்களை தள்ளிவிட்டும், பின்னர் மகனை கிணற்றில் போட்டும் கொன்றார். அதன் பின் அவரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக தெரிகிறது.

இன்று காலை வீட்டில் பாண்டீஸ்வரி மற்றும் குழந்தைகள் இல்லாததை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்த நிலையில் அவர்கள் தோட்டத்து வீட்டில் பிணமாக மிதந்தது தெரியவந்தது.

ஒரே கிணற்றில் 4 பேர் இறந்து கிடப்பது குறித்து வத்திராயிருப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் 4 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கணவர் இறந்த 3 நாளில் தனது 2 மகள்கள், மகனுடன் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com