அதிகாரியின் பாலியல் தொல்லையால் பெண் ஊழியர் தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயற்சி

மனவேதனை அடைந்த பெண் அதிகாரி கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்தபோது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். போலீசார் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அதிகாரியின் பாலியல் தொல்லையால் பெண் ஊழியர் தூக்க மாத்திரை தின்று தற்கொலை முயற்சி
Published on

ராயபுரம்:

ராயபுரம், கல்லறை சாலை அருகே குடிநீர் வாரிய அலுவலகம் உள்ளது. இங்கு திருமணமான 33 வயது இளம்பெண் அதிகாரியாக உள்ளார்.

இவர் கருத்து வேறுபாட்டால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.

அதே அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் ஜமீன்பல்லாவரத்தை சேர்ந்தவர் பாலியல் ரீதியாக பெண் அதிகாரிக்கு தொல்லை கொடுத்தார். இதுபற்றி கண்டித்தும் அதிகாரியின் தொல்லை எல்லை மீறியது.

இதனால் மனவேதனை அடைந்த பெண் அதிகாரி கடந்த 24-ந் தேதி வீட்டில் இருந்தபோது தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை நலமாக உள்ளது.

இதற்கிடையே இதுபற்றி அறிந்த, பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரியின் மனைவி, தற்கொலைக்கு முயன்ற பெண் அதிகாரியை செல்போனில் தொடர்பு கொண்டு அவருக்கும், அவரது மகள் மற்றும் தாய்க்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் அதிகாரி தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை தொடர்பாக ராயபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பாலியல் தொல்லை கொடுத்த அதிகாரி மீது 4 பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அதிகாரியை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது.

குடிநீர் வாரிய அலுவலகத்தில் அதிகாரி ஒருவர் தனக்கு கீழ் பணிசெய்யும் பெண் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com