அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க விரும்புகிறோம்- கட்சி நிர்வாகிகள் கருத்து

இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி.பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்க விரும்புகிறோம்- கட்சி நிர்வாகிகள் கருத்து
Published on

தி.மு.க. இளைஞரணியின் 2-வது மாநில மாநாடு சேலத்தில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.

இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு நடத்திய மாநாடு என்பதால் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

சுமார் 5 லட்சம் பேர் திரண்ட இந்த மாநாடு அமைச்சர் உதயநிதியின் திறமையை வெளிப்படுத்தும் மாநாடாக அமைந்தது. இந்த மாநாட்டுக்கு பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இது வதந்தி என்று மாநாட்டுக்கு முன்பே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெளிவுப்படுத்தி இருந்தார்.

ஆனாலும் இளைஞரணி மாநாட்டில் பங்கேற்றவர்கள் அனைவரும் அமைச்சர் உதயநிதியின் பேச்சையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சையும் கூர்ந்து கவனித்தனர். மாநாட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தலைவர்களது கட்அவுட்டுகளில் பெரியார், அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரிசையில் உதயநிதி ஸ்டாலின் படமும் இடம்பெற்றிருந்தது.

இந்த கூட்டத்தில் பங்கேற்ற இளைஞரணியினர் மட்டுமின்றி கட்சியின் மூத்த நிர்வாகிகள் அனைவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த படியாக அடுத்த தலைவராக உதயநிதியை புகழ்ந்தனர். இளமையும், சுறுசுறுப்பும் கொண்டவர் உதயநிதி ஸ்டாலின், இந்துத்துவா அரசியலை எதிர்கொள்ள துணிவுமிக்க தலைவராக உதயநிதி ஸ்டாலின் செயல்படுகிறார். இப்படிப்பட்ட தலைவர்தான் தேவை என்று புகழ்ந்தனர். சேலம் மாவட்ட இளைஞரணி உறுப்பினர் ஆர்.செல்வராஜ் கூறுகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி விரைவில் கிடைக்கும் என்று நம்புவதாக தனது ஆசையை வெளிப்படுத்தினார்.

இதேபோல் பெரும்பாக்கத்தை சேர்ந்த டி.ஆர்.முருகேசன் என்பவரும் உதயநிதியின் அரசியல் திறமையை வெளிப்படுத்தி புகழ்ந்தார். பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளை எளிதில் எதிர்கொள்ளும் அளவுக்கு உதயநிதியின் பேச்சு அமைந்து உள்ளதாக தெரிவித்தார்.

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி பேசுகையில், அரசியலில் மறைந்த தலைவர் கலைஞர் காட்டிய வழியில் நடந்தோம். அதனை தொடர்ந்து தளபதி மு.க. ஸ்டாலினை ஏற்றுக் கொண் டோம். இப்போது உதய நிதியை துணை முதல்வராக்க விரும்புகிறோம்.

உதயநிதியின் வருகையால் தி.மு.க. இளைஞரணி புத்துணர்ச்சி பெற்றுள்ளது என்றும் கருத்து தெரிவித்தார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது உதயநிதி பிரசாரம் செய்ததை விட இப்போது அவரது பிரசாரம் இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவரது உழைப்புக்கு கண்டிப்பாக அங்கீகாரம் கிடைக்கும் என்றும் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.

மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த மாநாடு தி.மு.க.வுக்கு ஒரு புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது. அவ்வளவு சிறப்பாக மாநாட்டை நடத்தி காட்டியிருக்கிறீர்கள். உங்கள் உழைப்புக்கு உரிய பலன் வந்து சேரும் என்று பெருமையுடன் கூறினார்.

மாநாட்டில் அமைச்சர் உதயநிதியை போல் அவரது மகனான இன்பநிதியும் வெள்ளை நிற டிசர்ட் அணிந்து பங்கேற்றிருந்தார். அவரது வருகையும் மாநாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com