யூடியூப்பில் போலி விளம்பரம் செய்து ரூ.70 லட்சம் மோசடி- காய்கறி புரோக்கர் கைது

திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 12 பேர் ரூ.70 லட்சத்தை செலுத்தி உள்ளனர். போலீசார் சூர்யாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் தென்காசியில் அவர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது.
சூர்யா
சூர்யா
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் சூர்யா (வயது35). இவர் விவசாயிகளிடம் மொத்தமாக காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து வருகிறார். கடந்த ஆண்டு யூடியூப்பில் புதிதாக கணக்கு தொடங்கி மும்பை நாசிக் பகுதியில் வசித்து வருவதாகவும், வெங்காயம் வாங்கி பல மாநிலங்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.

விலை அதிகரிக்கும் சமயங்களில் இருப்பு வைத்த வெங்காயத்தை விற்பனை செய்வதன் மூலம் கூடுதல் லாபம் பெறலாம் என தெரிவித்துள்ளார். வெங்காயத்தில் முதலீடு செய்தால் எந்த காலத்திலும் நஷ்டம் கிடையாது என தெரிவித்ததோடு 30 சதவீதம் அதிகமாக பணத்தை திருப்பி தருவதாகவும் விளம்பரம் செய்துள்ளார்.

இதனை நம்பி சென்னை வளசரவாக்கம் தனியார் நிறுவன ஊழியர் சந்திரசேகர் (40), சூர்யாவை தொடர்பு கொண்டு அவரது வங்கி கணக்கில் ரூ.14 லட்சம் செலுத்தினார்.

இதேபோல் திருச்சி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த 12 பேர் ரூ.70 லட்சத்தை செலுத்தி உள்ளனர். ஆனால் குறிப்பிட்ட காலத்தில் அவர் கூறியபடி பணத்தை திரும்ப செலுத்தவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் சூர்யாவை தொடர்பு கொள்ள முயன்றபோது அவர் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து சென்னை சந்திரசேகர் திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சூர்யாவை தீவிரமாக தேடி வந்த நிலையில் தென்காசியில் அவர் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வினோதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜகோபால் தலைமையிலான போலீசார் அங்கு சென்று சூர்யாவை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com