கூடங்குளம் அருகே நிலத்தரகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது

ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. மணி மகன் விஜயன், ஆவரைகுளம் சென்று ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
கூடங்குளம் அருகே நிலத்தரகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 2 பேர் கைது
Published on

நெல்லை:

நெல்லை மாவட்டம் பழவூரை அடுத்த ஆவரைகுளம் அருகே உள்ள சவுந்தரலிங்கபுரத்தை சேர்ந்தவர் மணி. இவர் அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விஜயன் (வயது 37). நிலத்தரகர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் 2 பேர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த பகுதிகளில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஆவரைக்குளத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது மகன் சாமிதுரை(21) என்பவர், தனது நண்பரான ஹரிகரன்(21) என்பவருடன் சேர்ந்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடினர். ஆனால் எந்த சம்பவமும் நடக்காதது போலவே 2 பேரும் தங்களது வீடுகளில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் பிடித்து வந்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

சாமிதுரையின் தந்தை ராமகிருஷ்ணன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தனது நண்பர் ஒருவருடன் மணி வைத்துள்ள டீக்கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகி உள்ளது. இதனை மணி சமரசம் செய்ய முயன்றபோது அவர் தாக்கப்பட்டார்.

இதனால் மணி மகன் விஜயன், ஆவரைகுளம் சென்று ராமகிருஷ்ணனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பதிலுக்கு ஆத்திரத்தில் விஜயன் வீட்டில் சாமிதுரை மற்றும் அவரது நண்பர் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com