பணிக்கு வராத ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான பஸ்கள் ஓடின.
பணிக்கு வராத ஊழியர்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்
Published on

சென்னை:

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றும் 1.35 லட்சம் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு, அகவிலைப்படி வழங்குதல், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அண்ணா தொழிற்சங்கம், ஏ.ஐ.டி.யு.சி. சி.ஐ.டி.யு. உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் ஒருசில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டாலும் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொதுமக்கள் உள்ளூர், வெளியூர் பயணம் எவ்விதத்திலும் பாதிக்காத வகையில் அசு முழு அளவில் பஸ்களை இயக்கி வருகிறது.

சென்னையில் இருந்து வழக்கமாக பல்வேறு நகரங்களுக்கு புறப்பட்டு செல்லக்கூடிய பஸ்கள் இயக்கப்பட்டன.

அதேபோல வெளியூர்களிலும் பஸ்கள் வழக்கம் போல் ஓடின. அரசு, தனியார் அலுவலகங்களுக்கு செல்வோர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்கள் வழக்கம் போல பஸ்களில் பயணித்தனர்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக வேலைநிறுத்தம் நீடித்து வருகிறது. மேலும் 12-ந் தேதி முதல் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட வேண்டும். சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கு டிரைவர், கண்டக்டர்கள் முழு அளவில் பணியில் இருக்க வேண்டும்.

அதனை கருத்தில் கொண்டு ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அழைப்பு கொடுக்கப்பட்டது. ஆனாலும் அ.தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் போராட்ட களத்தில் தீவிரமாக உள்ளன.

இதற்கிடையே வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர், பஸ்களை மறிப்போர், ஊழியர்களை தாக்குவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் சில தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகளை அந்தந்த மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் தொடர்பு கொண்டு பணிக்கு திரும்புமாறு கூறி வருகின்றனர்.

ஆனாலும் அவர்கள் பிடிவாதமாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பஸ் நிலையங்களுக்கு சென்று பஸ்களை இயக்க விடாமல் மறிப்பது, ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையொட்டி ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பட்டியல் தயாரித்து அவர்களுக்கு முதலில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு போக்குவரத்து கழக நிர்வாகத்தின்கீழ் செயல்படும் டெப்போக்களில் எத்தனை பேர் வேலைக்கு வரவில்லை என்ற விவரங்களை சேகரிக்க உயர் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதன்படி 8 போக்குவரத்து கழகங்களிலும் வேலைக்கு வராத ஊழியர்கள் பெயர் விவரங்கள் தற்போது சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது.

விரைவில் அவர்களுககு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. 15 நாட்களுக்குள் பதில் தர வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். 'நோ ஒர்க், நோ பே' என்ற அடிப்படையில் ஸ்டிரகை்கில் ஈடுபட்ட நாட்களுக்கு சம்பளம் ரத்து செய்வதோடு துறை ரீதியான சட்ட நடவடிக்கையும் பாயும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மிக குறைந்த அளவில் தான் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும் மேலாண்மை இயக்குனர் ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com