விடுமுறை நாளான இன்று கன்னியாகுமரியில் மீண்டும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கடல் நீர் மட்டும் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது.
படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.
Published on

கன்னியாகுமரி:

சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பள்ளிகூடங்கள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது.

இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழுகை நடத்தினர்.

கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர் மட்டும் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக்கண்காட்சி கூடம், பாரதமாதாகோவில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

வட்ட கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்தனர். மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களைகட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com