என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை
    X

    கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை

    • தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • அணைக்கு செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும்.

    இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

    அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு பலத்த மழை கொட்டியது. குறிப்பாக கோபி, கொடிவேரி நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

    கோபி கரட்டடிபாளையம், நல்லகவுண்டன் பாளையம், கோபிபாளையம், பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையம், மொடச்சூர், வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம், பொலவ காளிபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 9 மணிக்கு தொடங்கிய மழை பெய்து கொண்டே இருந்தது.

    இதை தொடர்ந்து விடிய விடிய இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் மின் தடையும் ஏற்பட்டு அதிகாலை 3 மணி அளவில் மின் தடை நீங்கியது.

    இந்த நிலையில் கோபி அருகே உள்ள கொடிவேரி அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்ததால் பவானி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையொட்டி கொடிவேரி அணையில் 948 கன அடி தண்ணீர் வெளியேறுகிறது.

    இதனால் கொடிவேரி தடுப்பணையில் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் பெருக்கெடுத்து சென்றது. இதன் காரணமாக தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கும், பரிசல்கள் இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இதை தொடர்ந்து கொடிவேரி அணையின் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. மேலும் அந்த பகுதியில் சுற்றுலாப் பயணிகள் நுழைவதை தடுக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இதையடுத்து இன்று சனிக்கிழமை என்பதால் சுற்றுலா பயணிகள் பலர் கொடிவேரி அணைக்கு வந்து இருந்தனர். அணைக்கு செல்ல அனுமதி இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×