வீடுகளின் மீது கற்களை வீசியவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சீர்காழி-வடரங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வீடுகளின் மீது கற்களை வீசியவர்களை  கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
Published on

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே நிம்மேலி கிராமத்தில் இரவில் மது போதையில் கடை மற்றும் கடைகளின் வாசல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விற்பனை ஸ்டால்கள், தெரு மின்விளக்குக்குகள் ஆகியவற்றை சேதப்படுத்தியதோடு வீடுகள் மீது கற்களையும் தூக்கி எறிந்து மர்ம நபர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். மேலும் சிமெண்ட் கடை ஒன்றின் பெயர் பலகையை கிழித்து வெளியில் வைக்கப்பட்டிருந்த ஸ்டாலை அடித்து சேதப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறுவதாக கூறி ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த சீர்காழி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குறிப்பிட்டு அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்ததின் அடிப்படையில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சீர்காழி-வடரங்கம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com